தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில், தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். முதல்கட்டமாக ரூ.1,120 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது வி.எஃப்-6, வி.எஃப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.
இந்நிலையில், மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா இன்று காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் வின்ஃபாஸ்ட் ஆலைக்கு சென்று, தொழிற்சாலையை திறந்து வைத்து, கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார். மேலும் தூத்துக்குடியில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். இதில், பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில நிறுவனங்களையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.