மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்தவர், பெரியசாமி (வயது 45). இவர் தனக்கன்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (42). இருவரும் தனது மூன்று வயது பேரன் நித்திஷை அழைத்து இரு சக்கர வாகனத்தில் கீழக்குயில்குடி வரை சென்றுள்ளனர்.
மூவரும் வீடு திரும்பும் போது மொட்டமலை பகுதியில் வைத்து பின்னால் வந்த ஒரு லாரி கண் இமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதியது. உடனே சூதாரித்துக்கொண்ட பாட்டி மகேஷ்வரி சட்டென்று குழந்தையை தூக்கி சாலையோரத்தில் மகேசுவரி வீசினார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து பெரியசாமி தூக்கி வீசப்பட்டு காயத்துடன் ரோட்டின் ஓரத்தில் கிடந்தார். ஆனால் பாட்டி மகேஷ்வரி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அலறிய குழந்தையை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேசுவரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த பெரியசாமி மற்றும் குழந்தையை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து லாரியுடன் தப்பிய டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.