கிருஷ்ணகிரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கழுத்தில் பாஜக துண்டு அணிந்து பள்ளி மாணவர்கள் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணை படி, ஜூலை 27 தொடங்கி இரண்டாம் கட்ட பயணம் முடித்துக் கொண்டு தற்பொழுது மூன்றாவது கட்ட பயணத்தை தொடங்கியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் 3-ம் கட்ட சுற்றுப்பயணம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கியது. ராயக்கோட்டை அண்ணா சிலை அருகில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். கலை நிகழ்ச்சிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணத்தில் அதிமுக தொண்டர்கள் பாஜக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கழுத்தில் பாஜக துண்டு அணிந்து பள்ளி மாணவர்கள் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உரிய விசாரணை நடத்தி, பள்ளி சீருடைகள் மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.