ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நேற்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 142 மாணவ, மாணவியர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, 26 மாவட்டங்களில் 94 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கட்டப்பட்டுள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 21 மாவட்டங்களில், 243 பள்ளிகளில் 277 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர், பாரத சாரண சாரணியர் புதிய தலைமை அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினை தொடங்கி வைத்தார். அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 59 பள்ளிகளில் 94 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம், கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.



