தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்பவரின் மகன் தங்கவேல்சாமி (28). கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இவர் நெல்லை, வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநரான சுப்பையாவின் மனைவி பார்வதி (33) என்பவருடன் தங்கவேல்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால், நாளடைவில் இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இந்த விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்த நிலையில், இருவரையும் குடும்பத்தினர் கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால், தனது வீட்டில் இருந்து வெளியேறிய பார்வதி, தங்கவேல்சாமியுடன் சென்றார். ஆனால், தங்களை குடும்பத்தினர் மீண்டும் பிரித்து விடுவார்கள் என்று அஞ்சிய இருவரும், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
அதன்படி, தங்கவேல்சாமி தனது காரில் பார்வதியை குலசேகரன்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த நிலையில், வாயில் நுரை தள்ளியபடி உயிருக்குப் போராடினர். பின்னர், தங்களை காப்பாற்ற வேண்டும் என கதறியவாறு குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு காரில் சென்று இருவரும் விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே தங்கவேல்சாமியும், பார்வதியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : இனி சில நிமிடங்கள் போதும்.. டிரைவிங் லைசன்ஸில் ஃபோன் நம்பரை ஈசியா மாற்றலாம்..!! வழிமுறைகள் இதோ..!!



