வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பேரிடர் சீற்றத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டதில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 40 இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுமாயின் அங்கு வசிக்கும் மக்களை தற்காலிகமாக பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்துதுறை அலுவலா்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மழைக்காலங்களில் பெருமழை மற்றும் புயல்காற்றினால் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதை மற்றும் மழைநீா் தேங்கியுள்ள இடத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதைக் கண்டால் உடனுக்குடன் மின்துறை அலுவலக இலவச தொடா்பு எண்ணில் 9487899841, 9487899842, 9487899843, 9487899844, 9498794987. தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுபாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கவும், அப்பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை தவிா்த்து அசம்பாவிதம் ஏற்படுவதை தடுத்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள் மற்றும் வட்டாட்சியர்களின் கைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . நாள் முழுவதும் இயங்கக்கூடிய 1077 மற்றும் 04172-271766, 04172-271966 ஆகிய எண்களுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மேலும் நிகழ்வுகளை அவ்வப்போது படம்பிடித்து அல்லது விடியோ வடிவில் வாட்ஸ்ஆப் மூலமாக 8300929401 என்ற எண்ணிற்கு உடனுக்குடன் அனுப்பிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.



