இன்றைய தினம் (நவம்பர் 5) ஐப்பசி மாதப் பௌர்ணமி என்பதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களிலேயே மிகவும் உயர்ந்ததாக கருதப்படும் இந்த அன்னாபிஷேகம், ஐப்பசி பௌர்ணமியில் சந்திர பகவான் தனது 16 கலைகளுடன் பிரகாசிக்கும் வேளையில் சிவலிங்கத்திற்கு அன்னம் சாத்தி வழிபடப்படுகிறது. இது மனக்கவலைகளை நீக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்த அன்னாபிஷேக திருநாளில் பக்தர்கள் மறந்தும் செய்யக்கூடாத சில முக்கிய விஷயங்கள் உள்ளன. குறிப்பாக, இன்று அரிசி, பால் மற்றும் பால் பொருட்களை அண்டை வீட்டாருக்கோ அல்லது வேறு யாருக்கோ கடனாகக் கொடுக்கவோ, பிறரிடம் இருந்து கடனாகப் பெறவோ கூடாது. இவ்வாறு செய்வது அன்னை அன்னபூரணி மற்றும் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும், இந்தச் சிறப்பு நாளில் உணவை உதாசீனப்படுத்துவதோ அல்லது வீணாக்குவதோ கூடாது. அவ்வாறு செய்தால், தீராத வறுமை வந்து சேரும் என்றும் ஐதீகம் சொல்கிறது.
பௌர்ணமி தினமான இன்று, மாலை வேளையில் சூரியன் மறைந்த பிறகு வீட்டில் வெளிச்சம் இல்லாமல் இருக்கக் கூடாது. வீட்டிலுள்ள அனைத்து விளக்குகளையும் ஏற்றி வைக்க வேண்டும். இவ்வாறு விளக்குகள் அணைந்த நிலையில் இருள் நீடித்தால், அன்னலட்சுமி நம் வீட்டில் தங்காமல் வறுமை தாண்டவமாடும் என்றும் நம்பப்படுகிறது.
சிவன் கோயில்களில் இன்று சிவலிங்கத்திற்கு சாத்தப்படும் அன்னம் மற்றும் பாகற்காய் உள்ளிட்ட பிரசாதங்களை பக்தர்கள் தவறாமல் பெற்று உண்ணுவது ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பெருக்குவதாக கருதப்படுகிறது. அன்னாபிஷேகத்தை பார்ப்பதுடன், அதற்குத் தேவையான அரிசி, பால், தேன் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் மிகவும் சிறப்பான பலனை அளிக்கும்.
கோயிலில் மட்டுமின்றி, வீட்டில் உள்ள ஸ்படிகம், கருங்கல் அல்லது உலோகத்தாலான சிவலிங்கத்திற்கும் பச்சரிசி சாதத்தை படைத்து, காய்கறிகள், பழங்கள் கொண்டு அலங்கரித்து அன்னாபிஷேகம் செய்யலாம் என்றும் ஆன்மீக பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.



