சவுதி அரேபியாவில் உம்ரா யாத்திரைக்குச் சென்ற இந்திய பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று காலை, மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் செய்த பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு டீசல் டாங்கருடன் மோதியதில், குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர்..
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 1.30 மணியளவில், மதீனாவிற்கு 160 கிமீ தொலைவில் உள்ள முப்ரிஹத் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த பக்தர்களில் பெரும்பாலோர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்; இதுவரை ஒரே ஒருவரே உயிருடன் மீண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானா முதல்வர் ரெவந்த் ரெட்டி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கான இரங்கலைத் தெரிவித்தனர். மேலும், தெலங்கானா அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் ₹5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சவுதி பேருந்து விபத்து – முக்கிய தகவலகள் :
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனார் பேசிய போது “ ஹைதராபாத் மற்றும் தெலங்கானாவின் பல பகுதிகளில் இருந்து வந்த 45 உம்ரா யாத்திரிகர்கள் இந்த துயர விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஒரே ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
விபத்து எப்படி நடந்தது?
மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த பேருந்து,
டீசல் டாங்கர் லாரியுடன் மோதியதில் வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்புக்குப் பிறகு சில நிமிடங்களுக்குள் பேருந்து முழுவதும் தீப்பிடித்தது. “தீ மிகவும் வேகமாக பரவியதால் பயணிகள் தப்பிக்கவே முடியவில்லை,” என அதிகாரிகள் தெரிவித்தனர்..
பயணக்குழுவின் விவரங்கள்:
மொத்தம் 54 யாத்திரிகர்கள் கொண்ட குழு, நவம்பர் 9 அன்று ஹைதராபாத் இருந்து புறப்பட்டு மக்காவில் உம்ரா சடங்குகளை முடித்திருந்தது. குழுவில் 20 பெண்கள், 11 குழந்தைகள் இருந்தனர். 54 பேரில்— 4 பேர் தனியாக காரில் மதீனாவுக்குச் சென்றனர், 4 பேர் மக்காவில் தங்கினர், மீதமுள்ள 46 பேர் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தனர்..
உயிரிழந்தவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரும் உள்ளார்.. ஹூப்ளி நகரத்தைச் சேர்ந்த அப்துல் ஙானி ஷிர்ஹட்டி என்பவரும் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அவர் 25 ஆண்டுகளாக அபுதாபியில் டிரைவராக வேலை செய்துவருவதாக அவரது தம்பி தெரிவித்துள்ளார்.
உயிர் தப்பிய ஒரே பயணி – 24 வயது மொஹம்மது அப்துல் சூயேப் ஆவார்.. அவர் தற்போது சவுதி மருத்துவமனையில் ICU-வில் உள்ளார். பேருந்தில் தூக்கம் வராததால், டிரைவரின் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். விபத்து நடந்தவுடன், டிரைவருடன் சேர்ந்து ஜன்னல் வழியே குதித்து தப்பினார்.
ஆனால் இந்த விபத்தில் அவருடைய பெற்றோர், தாத்தா, மற்றும் மாமாவின் குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தில் 18 பேர் உயிரிழப்பு:
35 வயதான சையது ரஷீத், தனது குடும்பத்திலிருந்து 18 பேரை இழந்துள்ளார்.
உயிரிழந்தோரில்: அவரது தந்தை சேக் நசீருத்தீன் (65), தாய் அக்தர் பேகம் (60), சகோதரர் (38), மனைவியர் (35), 3 குழந்தைகள், அமெரிக்காவில் வசித்த சிராஜுத்தீன் (40), மனைவி சனா (40), 3 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அடங்குவர்.
ரஷீத் இதுகுறித்து பேசிய போது “நவம்பர் 9 அன்று விமான நிலையத்தில் அவர்களை வழியனுப்பியபோது, அது கடைசி முறை என எனக்குத் தெரியவில்லை. குழந்தைகளுடன் ஒரு பேருந்தில் பயணிக்க வேண்டாம் என நான் கேட்டுக் கொண்டேன். அவர்கள் என் வார்த்தையை கேட்காமல் எல்லோரும் ஒன்றாக சென்றனர்.
குறைந்தபட்சம் சிலர் உயிருடன் இருந்திருப்பார்கள்,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Read More : அமைச்சர் உள்ளிட்ட 19 பேருடன் சென்ற விமானம் தீப்பிடித்து எரிந்து பயங்கர விபத்து; பதைபதைக்க வைக்கும் வீடியோ!



