வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ததன் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வுகள், மழையால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், ”சென்னையில் கனமழை பெய்து வெள்ளமாக இருந்தபோது அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் அனைத்தும், தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் கனமழை அதிகமாக உள்ள நிலையில், அனைத்து மாவட்டத்திற்கும் தேர்வினை ஒத்திவைத்தால், வரும் பருவத்தேர்வில் பாதிப்பு ஏற்படும்.
ஆகையால், 5 தென்மாவட்டங்களுக்கு மட்டும் தேர்வை ஒத்திவைத்துள்ளோம். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி அனைத்து வகுப்புகளுக்கும் சனிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான வகுப்புகள் அடுத்த வாரம் துவங்கும். இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்வினை ஒத்திவைப்பார்கள். தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் படித்த மாணவர்கள், ஆட்சியரின் பாதுகாப்பின்படி, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.