சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் வாயிலாக செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது. சென்னையில் நிலவும் வெறிநாய்க்கடி பிரச்சனைக்கு தீர்வு காணும் முறையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பதிவு செய்தல், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மைக்ரோ சிப்பிங் பொருத்துதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டது.
அந்த வகையில் இந்த பணிகளை செய்ய சென்னை முழுவதும் 7 செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று முதல் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் உரிமம் பெறாவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது. தற்போது செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; சென்னை மாநகராட்சியில் இதுவரை 65,422 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 24,477-க்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெறுவதற்கு நவம்பர் 23 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கோரிக்கை அடிப்படையில் இந்த காலக்கெடு டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருவிக நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் (ஞாயிறு உட்பட) காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை உரிமம் பெறும் சேவையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



