உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.18 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விமான ஊழியர்களுக்கான புதிய பணி நேர வரம்பு விதிகளை இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ)கடந்த ஆண்டே அறிவித்திருந்தது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் விமான பைலட்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த விதிகள் கடந்த மாதம் அமலுக்கு வந்தன.
பணி நேரம் குறைந்ததால் இண்டிகோ நிறுவனத்தில் பைலட் உள்ளிட்ட விமான ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களாகசுமார் 2 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நாடு முழுவதும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதையடுத்து, புதிய விதிகள்தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக டிஜிசிஏ நேற்று முன்தினம் அறிவித்தது.
இதற்கிடையே, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்கி வருகின்றன. ஆனால், கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்மற்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. பயணிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நியாயமான கட்டணம் வசூலிப்பதை உறுதிசெய்வதற்காக, ஒழுங்குமுறை அதிகாரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் விமானங்களில் (சாதாரண வகுப்பு) 500 கி.மீ. வரையிலான தூரத்துக்கு அதிகபட்சமாக ரூ.7,500 கட்டணம், 500 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்துக்கு ரூ.12,000 கட்டணம், 1,000 முதல் 1,500 கி.மீ. வரையிலான தூரத்துக்கு ரூ.15,000 கட்டணம். 1,500 கி.மீ.க்கு அதிகமான தூரத்துக்கு ரூ.18 ஆயிரம் கட்டணம் விதிக்கலாம். பயனாளர் மேம்பாட்டு கட்டணம் (யுடிஎப்), பயணிகள் சேவைக் கட்டணம் (பிஎஸ்எப்) மற்றும் வரிகள் இதில் அடங்காது. பிசினஸ் வகுப்பு மற்றும் உடான் விமான பயணங்களுக்கும் இது பொருந்தாது.
அனைத்து விமான நிறுவனங்களும் இந்த கட்டண உச்சவரம்பை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நிலைமை சீராகும் வரை இது அமலில் இருக்கும். சிக்கலில் உள்ள பயணிகளை சுரண்டுவதை தடுப்பது, அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்களை நிதி நெருக்கடிக்கு ஆளாக்காமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



