நடிகர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன்.. விஜய் முழு நேர அரசியலில் இறங்கி உள்ளதால் இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.. இதனால் ஜனநாயகன் திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் ஜனநாயகன் சினிமா பிரச்சனை என்பதை தாண்டி அரசியல் பிரச்சனையாக மாறி உள்ளது.. விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.. தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும்
ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது. அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. அமலாக்கத்துறை,சிபிஐ ,வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது
நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன்.என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும்,மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது.
ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள் ,காட்சிகள் தொலைக்காட்சி, யு டியூப்,சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர். இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம்.
பெண்களை ஆபாசமாகப் பேசுவது,சித்தரிப்பது,இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விசயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தற்போது திமுக கூட்டணியில் இருந்தாலும், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று தொடர்ந்து கூறி வருகிறது.. மேலும் தவெக உடன் கூட்டணியில் இணைய வேண்டும் எனவும் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்பதே கேள்விக்குறியாகி உள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் எம்.பி விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Read More : இதை செய்தால் தான் ஜனநாயகன் ரிலீஸ் ஆகும்.. விஜய்க்கு அமித்ஷா போட்ட ஒரே கண்டிஷன்..! பாஜகவின் பிளான் நடக்குமா?



