திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் அமைந்துள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில், வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது. விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம், சிற்பக்கலை நயத்திற்காகவும் பக்தர்களின் நம்பிக்கைக்காகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோவிலில் சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் சன்னதி, தாயார் சன்னதி மற்றும் ஆண்டாள் சன்னதி ஆகியவை தனித்தனியாக அமைந்துள்ளன. மேலும் இந்த ஆலயத்தில் ஹயக்ரீவர், தன்வந்திரி, லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், சொர்ண ஆகர்ஷண பைரவர், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட பல தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.
குறிப்பாக, திருவோண நட்சத்திர தினத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பெருமாளை தரிசனம் செய்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாக, சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் உள்ள 14 தனித்தனி தூண்கள் மற்றும் 2 இசை தூண்கள் குறிப்பிடப்படுகின்றன.
இந்த தூண்கள் அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன என்பது சிற்பக்கலையின் அற்புதமாக பார்க்கப்படுகிறது. புராணக் கதைகளின் படி, மண்டூக முனிவர் குடகனாறு ஆற்றங்கரையில் தவம் செய்தபோது, தாளாசூரன் என்ற அரக்கன் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமாலிருஞ்சோலை கள்ளழகர் அரக்கனை வதம் செய்து, முனிவரின் வேண்டுகோளை ஏற்று தாடிக்கொம்பு பகுதியில் சவுந்தரராஜ பெருமாளாக எழுந்தருளி பக்தர்களை காக்கிறார் என புராணம் தெரிவிக்கிறது.



