டெய்லி இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா? ஒரு தடவ இதை செஞ்சு பாருங்க. ருசிக்கும்… நாக்குக்கும் ருசி, உடம்புக்கும் சத்து!

hqdefault

ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் உணவுகளில் இடியாப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. செரிமானத்திற்கு இலகுவாக இருப்பதால், பலரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இது உள்ளது. பொதுவாக இடியாப்பம் அரிசி மாவில் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால், அரிசியை குறைக்க விரும்புபவர்கள் அல்லது மாற்று தானியங்களை உணவில் சேர்க்க நினைப்பவர்கள், ராகி மாவில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். ராகி இடியாப்பம் சுவையாக இருப்பதுடன், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்ததாகும்.


இதனால், இது ஆரோக்கியமான காலை அல்லது இரவு உணவாக அமையும். மேலும், குழந்தைகளுக்கும் இதை அளவோடு கொடுக்கலாம். இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் தங்களுக்கு ஏற்ற உணவுமுறையைப் பின்பற்ற மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

இடியாப்பம் செய்வது மிகவும் கடினம் என்று பலரும் நினைக்கிறார்கள். குறிப்பாக ராகி மாவில் இடியாப்பம் செய்யும்போது அது கடினமாகிவிடுமோ என்ற பயமும் இருக்கும். ஆனால், சரியான முறையில் மாவைத் தயாரித்தால், வீட்டிலேயே மென்மையான பஞ்சு போன்ற ராகி இடியாப்பத்தை மிக எளிதாக செய்து அசத்தலாம். முக்கியமாக, சுடுநீரின் அளவு சரியாக இருந்தால் இடியாப்பம் நீண்ட நேரம் வரை மென்மையாகவே இருக்கும்.

இந்த ராகி இடியாப்பத்தை தேங்காய்ப்பால், காய்கறி குருமா அல்லது ஆட்டுக்கால் பாயாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படுவதால் இது செரிமானத்திற்கும் ஏற்ற ஆரோக்கியமான உணவாகும். இந்த ராகி இடியாப்பம் செய்ய, இரண்டு கப் ராகி மாவு, தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், இரண்டரை கப் அளவு தண்ணீர் மற்றும் அரை கப் துருவிய தேங்காய் தேவைப்படும்.

முதலில் ராகி மாவை ஒரு வாணலியில் லேசாக வறுத்து, அதன் பச்சை வாசனை போகும் வரை கிளறி இறக்கி ஆறவிட வேண்டும். இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்தச் சுடுநீரை ராகி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டிகள் வராமல் கரண்டியால் கிளற வேண்டும். மாவு கை பொறுக்கும் அளவிற்கு ஆறியதும், அதை மென்மையாகப் பிசைந்து இடியாப்ப அச்சில் போட ஏற்ற பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.

இறுதியாக, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் மாவை இடியாப்பமாகப் பிழிந்து, சுமார் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்தால், மென்மையான சுவையான ராகி இடியாப்பம் பரிமாறத் தயாராகிவிடும்.

Also Read: கண்ட மாத்திரைய தூக்கிப் போடுட்டு, டெய்லி இதை சாப்பிடுங்க.. நோய் எதிர்ப்பு சக்தி முதல் கொலஸ்ட்ரால் வரை கட்டுக்குள் வரும்!

Saranya

You May Like