திருச்சி மாவட்டம் சிறுநாவலூர் ஊராட்சி எஸ்.என்.புதூரைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர், கலைச்செல்வி தம்பதி. இவர்களுக்கு தனுஷிக் (வயது 14) என்ற மகனும் தனுஷிகா (6) என்ற மகளும் இருந்தனர். தனுஷிக் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்த தனுஷிக் கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார்.
தனுஷிக்கு நீச்சல் நன்கு தெரிந்த நிலையில் கிணற்றின் உயரமான பகுதியில் இருந்து நீரில் குதித்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக கிணற்றின் திட்டில் மோதி பலத்த காயமடைந்தார். சுய நினைவை இழந்த தனுஷிக் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே பெற்றோருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உப்பிலியபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கிணற்றில் மூழ்கிய தனுஷிக்கை மீட்க முயற்சி செய்தனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தனுஷிக் உடலை சடலமாக மீட்டனர். உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



