கோடைக் காலம் தொடங்கியது முதல் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 0.9 கிமீ உயரத்தில் உள் தமிழக மாவட்டங்களிலிருந்து மத்திய கொங்கன்வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 4ம் தேதி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 5, 6ம் தேதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
மழைக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், ஏப்ரல் 6 வரை வெப்பத்தின் தாக்கம் குறையாது என்பதால் பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read more: ஏப்ரலில் அரிய திரிகிரக யோகம்..! இந்த 4 ராசிகளுக்கு ராஜபோக வாழ்வு கிடைக்கும்..!



