சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையில், திருச்செங்கோடு அருகே அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவில் பக்தர்களிடையே பெரும் புகழ் பெற்ற ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், முருகப்பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக, வழக்கமான திருநீருக்கு மாறாக “கருஞ்சாம்பல்” என்ற கருப்பு நிற விபூதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கரும்பின் சக்கையை எரித்து தயாரிக்கப்படும் இந்தச் சாம்பல், முதலில் மூலவருக்குப் படைத்து பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த கருஞ்சாம்பல் குறித்து பக்தர்களிடையே பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. குறிப்பாக பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தவர்களுக்கு, இங்கு வழங்கப்படும் கருஞ்சாம்பல் மற்றும் அபிஷேகத் தீர்த்தம் விஷத்தின் தாக்கத்தை குறைக்கும் என கூறப்படுகிறது. மேலும், நீண்டநாள் நோய்களால் அவதிப்படுபவர்கள் இந்தச் சாம்பலை நெற்றியில் பூசுவதன் மூலமும் உட்கொள்வதன் மூலமும் நிவாரணம் கிடைக்கும் என நம்புகின்றனர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசம் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா 10 நாட்கள் நடைபெற்று, அபிஷேகம், மயில் வாகன உலா, திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தைப்பூச தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுப்பது வழக்கம்.
மேலும், இந்த விழாவை ஒட்டி நடைபெறும் மாட்டுச் சந்தை தமிழ்நாட்டின் முக்கிய கால்நடை சந்தைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் காங்கேயம் காளைகள், மாடுகள், ஆடுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய சிறப்புகளால், இந்தக் கோவில் பக்தர்களை ஆண்டுதோறும் பெருமளவில் ஈர்த்து வருகிறது.
Read more: சுக்கிரன் – சந்திரன் சேர்க்கை: இரு கோள்களின் அரிய சங்கமம்… இந்த ராசிகளுக்கு எதிர்பாராத பண வரவு!



