இந்திய டி20 கிரிக்கெட் அணியின் மாற்றத்துக்கும், உலகக் கோப்பை வெற்றிக்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படும் சூர்யகுமார் யாதவ், தற்போது பேட்டிங் ஃபார்ம் சரிவு காரணமாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக விளங்கிய சூர்யகுமார், சமீப காலங்களில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
கடந்த 9 இன்னிங்ஸ்களில் அவர் 136.72 ஸ்டிரைக் ரேட்டில் வெறும் 242 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது அவரது முந்தைய சாதனைகளுடன் ஒப்பிடும்போது கணிசமான சரிவாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்ததன் மூலம் சிறப்பான தொடக்கம் கண்ட அவர், அதன் பின்னர் தொடர்ந்து ஏமாற்றமளித்தார்.
தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அவர் முறையே 18, 18, 11 மற்றும் 0 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த தொடர்ச்சியான குறைந்த ஸ்கோர்கள், அவரது ஃபார்ம் குறித்த கேள்விகளை அதிகரித்துள்ளன.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, அவரது ஆட்டம் இதேபோல் தொடர்ந்தால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருடன் ஆலோசனை நடத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. “சூர்யகுமார் யாதவ் தற்போது அணியை வழிநடத்துகிறார். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக சீரான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும். 2028 வரை தொடரும் அவரது பயணம், அவரது செயல்திறனைப் பொறுத்தே இருக்கும்” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் சூர்யகுமார் யாதவ் 21 போட்டிகளில் வெறும் 218 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் ஒரு அரைசதம் கூட அடிக்காதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அமெரிக்காவுக்கு எதிரான 84 ரன்கள் உட்பட நான்கு அரைசதங்கள் அடித்து, மீண்டும் ஃபார்மில் திரும்ப முயற்சித்து வருகிறார். இதேநேரத்தில், ஐபிஎல் 2026 தொடரிலும் அவரது ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. இதுவரை 4 போட்டிகளில் 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் டெல்லி அணிக்கு எதிராக எடுத்த 51 ரன்களே அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.
இத்தகைய சூழ்நிலையிலும், இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் மீது நம்பிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவரின் முதல் தேர்வாகவே அவர் தொடர்ந்து உள்ளார். மேலும், மே 31-ஆம் தேதி ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததும், இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெற உள்ளது.
இந்த தொடர்கள், சூர்யகுமாரின் ஃபார்மை மீட்டெடுக்க முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகின்றன. அதேசமயம், கௌதம் காம்பீரின் பயிற்சியாளர் ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின் முடிவடைய உள்ள நிலையில், அதை 2028 டி20 உலகக் கோப்பை வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more: ஒரே ஊசி.. 331 குழந்தைகளுக்கு HIV உறுதி.. பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் அவலம்..!



