குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக பலர் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சூழலில், ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்பான முதலீட்டை வழங்கும் மத்திய அரசு திட்டங்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்தியாவில் அஞ்சல் நிலையங்கள் வாயிலாக பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் முதலீடு செய்யப்படும் பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், வங்கிகளை விட சிறந்த வட்டி வருமானமும் கிடைப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், “கிசான் விகாஸ் பத்திரம்” என்ற திட்டம் தற்போது முதலீட்டாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகைக்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும், காம்பவுண்டிங் முறையில் வட்டி கணக்கிடப்படுவதால், முதலீடு வேகமாக வளர்ச்சி அடைகிறது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, முதலீடு செய்யப்பட்ட தொகை 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களில் இரட்டிப்பாக மாறும். உதாரணமாக, ₹5 லட்சம் முதலீடு செய்தால், அது காலாவதியானபோது ₹10 லட்சமாக உயர்ந்திருக்கும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ₹1000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. ஆனால் ₹50,000-க்கு மேல் முதலீடு செய்யும் போது PAN கார்டு விவரங்கள் கட்டாயமாக வழங்க வேண்டும். அதிக லாபம் தரும் என கூறப்படும் அங்கீகாரம் இல்லாத திட்டங்களில் சிக்காமல், அரசு அங்கீகரித்த முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read more: ஆஹா.. பாத்தாலே சாப்பிடணும் போல இருக்கே.. இணையத்தில் வைரலாகும் கோகோ-கோலா கேக்..! எப்படி செய்வது..?



