கோவை மாவட்டம் சூலூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வீடியோ எடிட்டிங் செய்யும் தொழிலை சொந்தமாக அலுவலகம் எடுத்து செய்து வருகிறார். கடந்த 2019-இல் இவருக்கு திருமணமான நிலையில், இவருக்கு தற்போது 4 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023 முதல் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், உஷாவின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அறை ஒன்றில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான அந்தோணி மரிய ராபின் என்பவர் வசித்து வந்துள்ளார். அந்தோணியும் உஷாவும் நட்பாக பழகி வந்துள்ளனர். உஷா கணவன் இல்லாமல் தனியாக வசித்து வருவதை அறிந்துக் கொண்ட அந்தோணி, உஷாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த ஒரு வருடமாகப் பழகி வந்துள்ளார்.
ஆனால், சமீபத்தில் அந்தோணிக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்ததால், இருவரும் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தோணி, திருச்சியைச் சேர்ந்த தனது நண்பரான கிரிஷ் சாமுவேல் குமார் (30) என்பவருடன் உஷாவின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். சமாதானம் பேசுவதற்காக அங்கு சென்ற அந்தோணி மற்றும் கிரிஷ், பேசிக் கொண்டிருந்த போதே, திட்டமிட்டபடி அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துள்ளனர்.
மயக்க மருந்து கலந்த ஜூஸை குடித்த உஷா மயங்கி உள்ளார். இதையடுத்து, அந்தோணி மற்றும் கிரிஷ் ஆகிய இருவரும் சேர்ந்து மயக்க நிலையில் இருந்த உஷாவை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் உஷா மயக்கம் தெளிந்து அழுதபோது, தாங்கள் பலாத்காரம் செய்ததைச் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகக் கூறி மிரட்டியுள்ளனர். மேலும், “இனி திருமணம் செய்யக் கோரி வற்புறுத்தினாலோ அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ, இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம்; உன்னையும் உனது 4 வயது மகனையும் கொலை செய்துவிடுவோம்” என்று கூறிவிட்டு தப்பியுள்ளனர்.
ஆனால், உஷா நேற்று இரவு கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலிசார், கூட்டுப் பலாத்காரம், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தலைமறைவாக இருந்த கிரிஷ் சாமுவேல் குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கிரிஷ் சாமுவேல் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இக்குற்றச்சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான தலைமறைவாக உள்ள அந்தோணி மரிய ராபினைப் பிடிக்கப் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read: “அவ என்னோட பொண்டாட்டி டா!” ஆத்திரமடைந்த கணவன், டாஸ்மாக் கடையில் நடந்த கொடூரம்..



