உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், CNN நடத்திய விரிவான புலனாய்வு, இணையத்தில் செயல்படும் ரகசிய குழுக்களின் ஒரு கொடூரமான வலையமைப்பை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சிஎன்என்-இன் ‘சமமானவர்கள்’ (As Equals) தொடரின் கீழ் மார்ச் மற்றும் ஏப்ரல் 2026-ல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பாலியல் வன்முறை இயல்பாக்கப்பட்டு, சில சமயங்களில் வணிகமயமாக்கப்படும் டிஜிட்டல் வெளிகளை அம்பலப்படுத்தியுள்ளது.
புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாவது, இவ்வகை குழுக்களில் மயக்க மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது, சட்டத்திலிருந்து எப்படி தப்பிக்கலாம், தாக்குதல்களை எவ்வாறு பதிவு செய்து பகிரலாம் போன்ற விஷயங்கள் குறித்து மிகவும் திட்டமிட்டும் விரிவாகவும் உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்த வன்முறைகளில் பெரும்பாலானவை பாதிக்கப்பட்டவர்களின் சொந்த வீடுகளுக்குள்ளேயே நடைபெறுகின்றன என்பது மிகுந்த கவலைக்குரிய அம்சமாகும். இது, குற்றவாளிகள் பெண்களின் மீது உள்ள நம்பிக்கையையும், அவர்களுடன் இருக்கும் நெருக்கத்தையும் பயன்படுத்தி எப்படி கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இந்தப் புலனாய்வில் அடையாளம் காணப்பட்ட முக்கிய தளங்களில் ஒன்று Motherless.com ஆகும். 2026 பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்த தளம் சுமார் 62 மில்லியன் வருகைகளைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தளத்தில், “#sleep”, “#passedout” போன்ற குறிச்சொற்களின் கீழ் பயனர்களால் பதிவேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான காணொளிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, சுயநினைவின்றி இருப்பதாகத் தோன்றும் பெண்களை சித்தரிப்பவை என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மேலும், சில காணொளிகளில் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் மயக்க நிலையில் உள்ளார்களா என்பதை உறுதி செய்வதற்காக, குற்றவாளிகள் அவர்களின் கண் இமைகளைத் தூக்கிப் பார்க்கும் “கண் பரிசோதனை” போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வகை காணொளிகளில் பல, பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றிருப்பது, இந்தக் கொடூர செயல்கள் இணையத்தில் எவ்வளவு பரவலாக உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.
புலனாய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், “Zzz” என்று அழைக்கப்படும் ரகசிய அரட்டைக் குழுக்கள் உட்பட பல தனிப்பட்ட ஆன்லைன் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்குழுக்களில் உறுப்பினர்கள், போதைப்பொருட்களின் பயன்பாடு, மருந்தளவு முறைகள் மற்றும் அவற்றை உணவு அல்லது பானங்களில் எவ்வாறு கலக்கலாம் என்பதுபோன்ற விபரங்களைப் பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது திட்டமிட்டு நடத்தப்படும் குற்றச்செயல்களுக்கு வழிகாட்டும் ஒரு ஆபத்தான சூழலை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிலர் இந்த முறைகேடுகளை வருமானமாக மாற்ற முயன்றதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. செவுட்டாவில் இருந்து செயல்படுவதாக கூறிய ஒருவர், டெலிகிராம் மூலம் “தூக்கமூட்டும் திரவம்” எனப்படும் பொருளை €150க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அந்தப் பொருள் நிறமற்றது, மணமற்றது என்றும், அதை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் நினைவில் இருக்காது என்றும் அவர் விளம்பரம் செய்திருந்தார்.
இதுமட்டுமல்லாமல், சிலர் போதைப்பொருள் உதவியுடன் நடைபெறும் தாக்குதல்களை நேரலையாக ஒளிபரப்புவதாக கூறி, பார்வையாளர்களிடமிருந்து கிரிப்டோகரன்சி மூலம் பணம் கோரியதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம், இணையத்தின் மறைமுகப் பயன்பாடுகள் எவ்வளவு ஆபத்தான அளவுக்கு சென்றுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.
போதைப்பொருள் உதவியுடன் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையிலிருந்து உயிர் தப்பிய ஒரு பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர், இத்தகைய இணைய தளங்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “இவை இணையவழி பாலியல் வன்கொடுமைக்கான பயிற்சி மையங்களாகவும், வன்முறையை ஊக்குவிக்கும் பள்ளிகளாகவும் செயல்படுகின்றன” என்று குற்றம்சாட்டினார். மேலும், இந்த தளங்கள் குற்றவாளிகள் புதிய முறைகளை கற்றுக்கொள்ளவும், ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படவும், சட்டப் பொறுப்பிலிருந்து தப்பிக்கவும் வழிவகுக்கின்றன என எச்சரித்தார்.
இந்தப் புலனாய்வு, பெண்களுக்கு மிக அருகிலேயே இருப்பவர்களே சில சமயங்களில் ஆபத்தானவர்களாக மாறுகின்றனர் என்ற அதிர்ச்சி உண்மையையும் வெளிப்படுத்துகிறது. ஆவணப்படுத்தப்பட்ட ஒரு சம்பவத்தில், ஒரு பெண் தனது கணவர் 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து தன்னை மயக்க நிலையில் ஆக்கி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததை பின்னர் தான் அறிந்துகொண்டார். அவர், தங்கள் மகனுக்கான மருந்தைத் தேநீரில் கலக்கி கொடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் கூறிய வார்த்தைகள் பெரும் அதிர்வை ஏற்படுத்துகின்றன: “நம்மைத் தொடர்ந்து வருபவர்கள், வெளியில் நடப்பவர்கள், அல்லது சமூக வலைதளங்களில் இணையும் நபர்கள் குறித்து நாம் எப்போதும் கவலைப்படுகிறோம். ஆனால் நம்முடன் வாழும் நபர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. அதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டும் என்பதை கூட உணரவில்லை.” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பான CNN செய்தி வெளியானதையடுத்து, போலந்தில் இந்த வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்கள், இணையத்தின் மறைமுக உலகம் எவ்வளவு ஆபத்தான பாதையில் செல்கிறது என்பதையும், பெண்களின் பாதுகாப்பு குறித்து உலகளவில் புதிய சவால்களை எழுப்பியுள்ளதையும் வெளிப்படுத்துகின்றன.



