மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் நடந்த கொடூர கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் காதலனின் மனைவியை ஒரு பெண் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வாலுஜ் பகுதியில் உள்ள பஜாஜ் நகர் ‘சாய் ஸ்ரத்தா பார்க்’ குடியிருப்பில் இந்த சம்பவம் அரங்கேறியது. 43 வயதான ஷைலா சோனார், முன்னாள் காதலனான மகேந்திராவின் வீட்டிற்குள் கத்தி மற்றும் ஏர் பிஸ்டல் எடுத்துக்கொண்டு நுழைந்துள்ளார். அப்போது வீட்டில் மகேந்திராவின் மனைவி சாதனா சோன்பேத்கர் மற்றும் அவரது மாமியார் கேசர்பாய் மட்டுமே இருந்தனர்.
ஆரம்பத்தில் சாதாரணமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான சண்டையாக மாறியது. ஷைலா ஏர் பிஸ்டலை எடுத்து சாதனாவை மிரட்டியுள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளியில், அந்த பிஸ்டல் கீழே விழ, அதை மாமியார் கேசர்பாய் வெளியே வீசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷைலா, பெப்பர் ஸ்ப்ரேவை முகத்தில் வீசி இருவரையும் நிலை தடுமாற செய்து, தன்னிடம் இருந்த பெரிய கத்தியால் சாதனாவை சரமாரியாக குத்தினார்.
தலை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பல முறை குத்தப்பட்டதால், சாதனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் மிகவும் கொடூரமாக இருந்ததால், அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த, மிட்க் வாலுஜ் போலீசார் வீட்டிற்குள் பதுங்கியிருந்த ஷைலாவை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், ஷைலா மற்றும் மகேந்திரா இடையே முன்பு உறவு இருந்ததும், திருமண வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இந்த முன்விரோதமே கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: 14 நாடுகளை கடந்து செல்லும் உலகின் நீளமான சாலை.. யூ-டர்னே தேவையில்லை..!



