தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி இன்பதுறை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவற்றின் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் “ அமலாக்கத்துறை கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் “ நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழங்கிய ஆதாராங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால் அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் உடனே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும் வழக்குப்பதியவில்லை என இன்பதுரை அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது புகார் மீது மட்டுமே வழக்குப் பதிய உத்தரவிட்டோம், குறிப்பாக நேரு மீது வழக்கு தொடர உத்தரவிடவில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை தெளிவுபடுத்தியது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஜூன் 4வது வாரத்துக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



