பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பௌரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் நிகழ்ந்த கோர விபத்து நகரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கனமழை காரணமாக பழமையான சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் நகரின் மற்றொரு இடமான வேகா சிட்டி மாலில் ஏற்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்துள்ளது.
சம்பவ இடத்தை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மிகுந்த துயரமான சம்பவம் என கூறினார். “மிகப் பழமையான சுவர் ஒன்று இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெருவோர வியாபாரிகள். இருவர் கேரளாவிலிருந்து பெங்களூருவுக்கு வேலைக்காக வந்தவர்கள்,” என்றார்.
மாநில முதல்வர் சித்தராமையா உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரில் வெள்ள அபாயம் மற்றும் பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து மீண்டும் ஆய்வு செய்ய பெருநகர பெங்களூரு ஆணையம் (GBA) களத்தில் இறங்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கர்நாடக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. பழுதடைந்த கட்டிடங்களை சரியாக பராமரிக்காததே இந்த துயரத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read more: இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப முயன்ற 3 அமெரிக்கர்கள் மீது அதிரடி நடவடிக்கை..!



