ஈரோடு மாவட்டம் கோபி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த வடிவேல் மரணமடைந்த நிலையில், அவரது மனைவி புஷ்பராணி (43) வேட்டைகாரன்கோவில் பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி முதல் அவர் காணாமல் போனதாக தகவல் வெளியாக, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே தொப்பையாறு பகுதியில் புஷ்பராணி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புஷ்பராணியின் செல்போன் அழைப்புகள் மற்றும் தொடர்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கவுந்தப்பாடி ஆலத்தூர் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (32) அடிக்கடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. புஷ்பராணி வேலை பார்த்த ஜவுளி நிறுவனத்திலேயே மகேந்திரனும் பணிபுரிந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறி, கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தங்களைப் பற்றிய உறவை மகேந்திரனின் மனைவியிடம் கூறிவிடுவதாக புஷ்பராணி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேந்திரன், தனது அக்காள் கணவர் சதீஷ் (35) உடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, “சந்தித்து பேசலாம்” என கூறி கடந்த 25ஆம் தேதி புஷ்பராணியை காரில் ஒகேனக்கலுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் காட்டூர் கருப்பராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில், அவரை மறந்துவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் புஷ்பராணி மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும் முன்கூட்டியே தயாராக வைத்திருந்த கட்டுக்கம்பியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை காரில் எடுத்துச் சென்று தொப்பையாறு பகுதியில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர். சில நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், செல்போன் கால் டீட்டெயில்கள் மூலம் இருவரும் போலீசாரிடம் சிக்கினர். தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Read more: பரபரப்பு.. ஸ்ரீரங்கத்தில் தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு..!



