ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா பகுதியில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூன்று இந்தியர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை “ஏற்றுக்கொள்ள முடியாதது” மற்றும் “மிகுந்த கவலைக்குரியது” என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம், வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களை இலக்காகக் கொண்ட எந்தவொரு தாக்குதலையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா பெட்ரோலியத் தொழில்துறை மண்டலத்தில் (FOIZ) அமைந்துள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் திங்கட்கிழமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின் படி, இந்த தீ விபத்து ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் ஈரானிலிருந்து வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய தூதரகம், ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்ட அறிக்கையில், காயமடைந்த மூன்று இந்தியர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு செய்தி நிறுவனம் WAM வெளியிட்ட தகவலின்படி, சம்பவத்துக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்த அவசரகால மீட்பு குழுக்கள் உடனடியாக பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஃபுஜைரா குடிமைப் பாதுகாப்புப் படையினர் நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மூன்று இந்தியர்களும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை தற்போது நிலையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலையை மேலும் அதிகரித்துள்ளதாகவும், சர்வதேச அளவில் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Read more: தவறான நம்பருக்கு ரீசார்ஜ் செய்துவிட்டீர்களா..? கவலைய விடுங்க.. இத பண்ணா உங்க பணம் உடனே கிடைக்கும்..!



