2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியை அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ ஆதரவு இல்லாததால், “தொங்கு சட்டசபை” நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழலில், இந்திய தேசிய காங்கிரஸ் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேசமயம், “மதவாத சக்திகளை கூட்டணியில் சேர்க்கக்கூடாது” என்ற நிபந்தனையையும் முன்வைத்துள்ளது. இதன் மூலம் தவெக கூட்டணியின் எம்.எல்.ஏ எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுவதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், பட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்தை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், 118 எம்.எல்.ஏக்களின் முழுமையான ஆதரவு கடிதம் சமர்ப்பிக்கப்படாததால், விஜய் 2 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து நாளை முதலமைச்சர் பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையே சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் விஜயுடன் தலைமைச் செயலாளர் சாய் குமார், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நாளை கேரள செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் நிலையில் ஆளுநரின் திடீர் கேரள பயணம் தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை பதவி ஏற்பு விழா நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே மாமல்லபுரம் சொகுசு விடுதியில் தங்கியுள்ள தவெக எம்.எல்.ஏக்களை அங்கேயே தங்கியிருக்க கட்சி தலைமை உத்தவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விஜய் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
Read more: Vijay Fitness : 50 வயதிலும் 20 வயதுத் தோற்றம்..! விஜய்யின் உணவுமுறை, ஃபிட்னஸ் ரகசியங்கள்..!



