2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல ஆச்சர்யங்களை கொடுத்தன.. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு இரு பெரும் திராவிட கட்சிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.. தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலேயே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைய உள்ளது.. அதாவது தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை.. எனவே விஜய்க்கு இன்னும் கூடுதலாக 10 இடங்கள் தேவை..
தேர்தலுக்கு முன்பே தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த காங்கிரஸ், கடைசியில் தான் திமுக கூட்டணியில் தொடர்ந்தது.. ஆனால் தற்போது தேர்தல் முடிவுகளுக்கு பின் தவெக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. திமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கி உள்ளது.. இதனால் 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்தது..
ஏற்கனவே 108 இடங்கள் தவெகவுக்கு இருந்த நிலையில் தற்போது காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததால் தவெகவின் பலம் 113ஆக உயர்ந்துள்ளது.. தவெக ஆட்சி அமைக்க மேலும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.. விசிகவிடம் தவெக ஆதரவு கோரிய நிலையில், திருமாவும் விஜய்க்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.. அதே போல் இடதுசாரிகளும் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர உள்ளதாக கூறப்படுகிறது..
இதனிடையே தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. இன்று மக்கள் மாளிகைக்கு சென்ற பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. அப்போது தவெக மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கட் ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.
எனினும் 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்காததால் விஜய் 2 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார். அதாவது விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து 48 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்..
தவெக தலைவர் விஜய் நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.. நாளை காலை 11 மணிக்கு அவரது பதவியேற்பு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.. இந்த விழாவில் 5000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. நாளை விஜய் முதலமைச்சராக பதவியேற்றால் 9-ம் தேதிக்குள் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.. கால அவகாசம் குறைவாக உள்ளதால் விஜய் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.. பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் விவரத்தை விஜய் தரவில்லை என ஆளுநர் மாளிகை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.. எனவே விஜய் நாளை முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது..



