தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி தொடங்கியதிலிருந்து வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிவதை தனது அடையாள பாணியாக வைத்திருந்தார். மக்கள் சந்திப்பு, பிரசாரம், மாநாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் அதே உடை பாணியில் அவர் கலந்து கொண்டதால், அவரது ஆதரவாளர்களும் அதையே பின்பற்றத் தொடங்கினர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட, பல இளைஞர்கள் இதே பாணி உடையில் வாக்களிக்க சென்றது கவனம் பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற பிறகு, விஜய் தற்போது கோட்–சூட் அணிந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். எம்.எல்.ஏ பதவியேற்பு, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் உள்ளிட்ட தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வுகளிலும் அவர் கோட்–சூட் உடையிலேயே இருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, விஜயின் கோட் சூட் பாணி குறித்து விமர்சித்தார். அவர் பேசுகையில், “இன்னும் ஓரிரு மாதங்களில் சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டால், அப்போதும் முதல்வர் கோட்–சூட் அணிந்து களத்தில் வருவாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேரிடர் காலங்களில் வேட்டி சட்டையுடன்தான் நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றினார்கள் என்பதை சுட்டிக்காட்டினார். மேலுல், தமிழக பண்பாட்டை முன்னிறுத்துவதாகக் கூறும் ஒருவர், மாநிலத்தின் மிக உயரிய இடமான சட்டமன்றத்திற்கு வரும்போது ஏன் பாரம்பரிய உடையைத் தவிர்க்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
Read more: இந்த நேரத்தில் துடைப்பம் வாங்குவது வறுமையையும், துரதிர்ஷ்டத்தையும் வரவழைப்பதற்குச் சமம்..!



