தவெக அமைச்சரவையில் இடம்பெறப் போகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்..
முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ம் தேதி ஒதுக்கப்பட்டன.. தொடர்ந்து நேற்று 9 அமைச்சர்களும் தலைமை செயலகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பதவியேற்றுக் கொண்டனர்..
தவெக தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டிலேயே, தவெக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று கூறியிருந்தார்.. அதன்படி தேர்தலுக்கு பின் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது..
திமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மொத்த 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.. அந்த 5 எம்.எல்.ஏக்களில் இருவரை அமைச்சர்களாக தேர்வு செய்வது குறித்து தவெக தலைமை மற்றும் காங்கிரஸ் மேலிடம் இடையே ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது..
அதில் கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மற்றொரு அமைச்சர் பதவிக்கு மேலூர் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாதன் மற்றும் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்ப்ட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம்பெறப் போகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 அமைச்சரவை இடங்களில் கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், மேலூர் எம்.எல்.ஏ விஸ்வநாதன் ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் 59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..



