பொதுவாக அரசியலில் “குதிரை பேரம்” என்பது, ஒரு அரசியல் கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க அல்லது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, எதிர்க்கட்சி அல்லது சுயேச்சை எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோரின் ஆதரவை பெற மறைமுக பேச்சுவார்த்தை நடத்துவது என்று பொருள்படும். இந்த செயல்பாடுகளில் பணம், அமைச்சர் பதவி, அரசியல் சலுகைகள், அதிகார வாய்ப்புகள் போன்றவை வழங்கப்படுவதாக பேரம் பேசுவார்கள். அதனால் இந்த வார்த்தை, அரசியல் நெறிமுறைகளை மீறி அதிகாரத்தைப் பெறும் முயற்சியை குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.
ஆனால் இந்த வார்த்தையின் தோற்றம் அரசியலில் இல்லை என்பது சுவாரஸ்யமான விஷயம். இதன் வரலாறு 19ஆம் நூற்றாண்டின் அமெரிக்காவுக்கு செல்லுகிறது. அப்போது குதிரை சந்தைகளில் வியாபாரிகள் மிகவும் சாமர்த்தியமாக பேரம் பேசி விற்பனை செய்தனர். குதிரைகளின் குறைபாடுகளை மறைத்து அதிக விலைக்கு விற்கவும், வாங்குபவர்களை மனப்பூர்வமாக சமாதானப்படுத்தவும் அவர்கள் முயற்சிப்பார்கள். இதனால் “குதிரை பேரம்” என்ற சொல், பேரம் பேசும் தந்திரத்தை குறிக்கும் சொல்லாகப் பரவியது.
பின்னர், இந்த சொற்றொடரை பிரபல அமெரிக்க எழுத்தாளரான மார்க் ட்வைன் தனது 1893ஆம் ஆண்டு வெளியான “ஐசக் ஆலனின் சுயசரிதை” என்ற சிறுகதையில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பின் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள், மறைமுக அரசியல் ஒப்பந்தங்கள் மற்றும் அதிகார பேரங்களை விவரிக்க இந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கினர்.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல ஜனநாயக நாடுகளில் கூட்டணி அரசியல் வளரத் தொடங்கியபோது, அரசியல் பேச்சுவார்த்தைகள் குதிரை சந்தை பேரங்களைப் போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அதன்பிறகு “குதிரை பேரம்” என்ற சொல் அரசியல் அகராதியில் நிரந்தர இடம் பிடித்தது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 தொகுதிகளில் வெற்றிப் பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இதர கட்சிகளின் ஆதரவை கோரியது. தவெக தனது தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழலில் “குதிரை பேரம்” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கூட்டணி அமைத்தல், நம்பிக்கை வாக்கெடுப்பு, ஆட்சி அமைத்தல் போன்ற தருணங்களில் இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தின் நெறிமுறைகளுக்கு எதிரான செயல் என்ற விமர்சனத்துடனும், அதிகார அரசியலின் ஒரு கருவி என்ற பார்வையுடனும் இந்த சொல் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
Read more: Breaking : IUML எம்.எல்.ஏ அமைச்சராகிறார்..! காதர் மொய்தீன் அறிவிப்பு..! ஷாக்கில் திமுக..!



