பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நிர்வாக சீர்திருத்தங்கள், ஆளுகைத் திறன் மற்றும் “விக்ஸித் பாரத் 2047” இலக்கை அடைவதற்கான செயல் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பிரதமர் மோடி, அரசின் எதிர்கால இலக்குகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், தேவையற்ற சர்ச்சைகளிலிருந்து விலகி நிர்வாகப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“விக்ஸித் பாரத் 2047 என்பது வெறும் முழக்கம் அல்ல; அது நமது உறுதிப்பாடு” என்று கூறிய பிரதமர், கடந்த கால சாதனைகளை விட எதிர்கால இலக்குகள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் நலனையே கொள்கை உருவாக்கத்தின் மையமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதோடு, நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்தி, கோப்புகள் தாமதமின்றி விரைவாக முடிவடைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் ஒன்பது அமைச்சகங்கள் தங்களது சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தன. வேளாண்மை, வனம், தொழிலாளர், சாலைப் போக்குவரத்து, வர்த்தகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரதமரின் சமீபத்திய ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மற்றும் அதன் மூலோபாய முக்கியத்துவம் குறித்து அமைச்சரவையில் விளக்கம் அளித்தார். அரசின் 12 ஆண்டு கால சாதனைகள் மற்றும் மூன்றாவது பதவிக்காலத்தின் இரண்டு ஆண்டு முன்னேற்றம் குறித்தும் பிரதமர் கூட்டத்தில் நினைவூட்டினார்.
Read more: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் X கணக்கு முடக்கம்..! இன்ஸ்டாவில் மட்டும் 18.9 மில்லியன் ஃபாலோவர்ஸ்..



