தெலங்கானா மாநிலத்தில் கடுமையான வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வருகிறது. குறிப்பாக மே 23, சனிக்கிழமையன்று மட்டும் 51 பேர் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் மாநிலத்தில் வெப்பத்தால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் 100-ஐத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு வியாழக்கிழமை 22 பேரும், வெள்ளிக்கிழமை 34 பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சனிக்கிழமையன்று பதிவான புதிய உயிரிழப்புகள் மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். கரீம்நகர் பகுதியில் 11 பேரும், கம்மம் மற்றும் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதிகளில் தலா 7 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் அடிலாபாத் மற்றும் நல்கொண்டா மாவட்டங்களில் தலா 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஹனம்கொண்டா, பூபாலப்பள்ளி, நிர்மல், மஞ்சேரியல், சூர்யாப்பேட்டை மற்றும் யாதாத்ரி புவனகிரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வடக்கு மற்றும் கிழக்கு தெலங்கானாவின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், வரும் வாரம் முழுவதும் கடுமையான வெப்ப அலை நீடிக்கும் அபாயம் இருப்பதாகவும், பல இடங்களில் பகல் நேர வெப்பநிலை 43°C முதல் 46°C வரை பதிவாகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஹைதராபாத் நகரில் வெப்பநிலை ஒப்பீட்டளவில் 41°C முதல் 42°C வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மே 24 மற்றும் 25 தேதிகளுக்குப் பிறகு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து தற்காலிக நிவாரணம் கிடைக்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடுமையான வெப்பத்தால் மக்கள் அதிகமாக பாதிக்கப்படக்கூடும் என்பதால், பிற்பகல் நேரங்களில் வெளியே செல்லாமல் இருக்கவும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், வெப்பத்தாக்கம் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறவும் அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
Read more: “10 மணிக்குள் ஆபீஸ்ல இருக்கணும்!” அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. தமிழக அரசு அதிரடி..!



