வடக்கு மியான்மரில் சுரங்கப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.. இந்த வெடி விபத்த்ல் 46 பேர் உயிரிழந்தனர்… தேடுதல் பணிகள் தொடர்வதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன எல்லைக்கு அருகிலுள்ள, இன ஆயுதக் குழுவான டாங் தேசிய விடுதலை இராணுவத்தின் (TNLA) கட்டுப்பாட்டில் உள்ள பகுதியான நம்காம் டவுன்ஷிப்பில் உள்ள காங்டப் கிராமத்தில், நண்பகல் வாக்கில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது.
கிராமத்தை நாசமாக்கிய மாபெரும் வெடிப்பு
குழந்தைகள் உட்பட 46 உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு தகனம் செய்ய அனுப்பப்பட்டதாக, சம்பவ இடத்திற்கு முதலில் சென்ற ஒருவர் தெரிவித்தார். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக டவுன்ஷிப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று மற்றொரு மீட்புப் படை பணியாளர் கூறினார். சுமார் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிட்ட அவர், வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது உட்பட பரவலான அழிவு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
சுதந்திர மியான்மர் ஊடகங்கள் மாறுபட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன, அவற்றில் சில உயிரிழப்பு எண்ணிக்கை 50 முதல் 55 வரை இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன. உள்ளூர் ஊடகங்களில் பரவி வரும் படங்களில், வெடிவிபத்தைத் தொடர்ந்து கிராமம் முழுவதும் அடர்த்தியான புகை, இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் சிதறிக் கிடக்கும் இடிபாடுகள் காணப்பட்டன.
சீன அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவியும், பலத்த உயிரிழப்புகளையும் அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பலத்த சேதத்தையும் உறுதிப்படுத்தியது. அதிக அளவிலான சுரங்க வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக முதற்கட்டமாகக் கண்டறிந்ததை அது மேற்கோள் காட்டியது.
டி.என்.எல்.ஏ வெளியிட்ட அறிக்கையில், சுரங்கம் மற்றும் கல் குவாரி நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக, அதன் பொருளாதாரத் துறையால் ஜெலிக்னைட் அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தது.. வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது..
சுரங்கம் மற்றும் பாறை வெடிப்பதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஜெலிக்னைட், காலப்போக்கில் முறையாக சேமித்து வைக்கப்படாவிட்டால் மிகவும் நிலையற்றதாக மாறக்கூடும்.
2021-ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து மியான்மர் குழப்பத்தில் உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஜனநாயக ஆதரவுக் குழுக்கள் மற்றும் இன ஆயுத அமைப்புகளிடமிருந்து ஆயுத எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. டி.என்.எல்.ஏ அமைப்பானது, இராணுவத்துடன் தொடர் மோதல்களில் ஈடுபட்டு, தற்போது வடக்கு ஷான் மாநிலத்தின் சில பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூன்று சகோதரத்துவக் கூட்டணியின் ஒரு பகுதியாகும்.
உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடர்வதோடு, வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவியையும் தற்காலிக தங்குமிடத்தையும் வழங்கி வருகின்றனர்.



