தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார்.. அப்போது மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் முதல்வர் பதில் வழங்கினார்..
முதல்வர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக பேசி தன்னை தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.. அப்போது டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.. அப்போது சபாநாயகர் தலையிட்டு, முதல்வரின் உரை முடிந்த பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்..
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய் “டாஸ்மாக் மட்டுமல்லாமல் பல துறைகளில் கட்சி நிதி வசூலிக்கப்பட்டது.. அரசு பணத்தை தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம் ஏற்கனவே தொட்டவர்களை விடமாட்டோம்.. மக்கள் பணத்தை தொட்டவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம்.. திமுக தயவால் தான் இந்த ஆட்சி நடக்கிறது என்று புதிய ஆயுதத்தை எடுத்துள்ளனர்.. மக்கள் தயவால் தான் இந்த ஆட்சி நடக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளாக் தான் இந்த ஆட்சி நடக்கிறது.. நீங்கள் அனுப்பி வைத்தவர்கள் என்றால், அமைச்சர் பதவி தந்தால் ஏன் கதறுகிறீர்கள்..?” என்று தெரிவித்தார்..
இதனிடையே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.. அதன்பின்னர் தனது உரையை தொடர்ந்த முதல்வர் விஜய் குட்டிக் கதை சொல்கிறேன் என்று சொன்னார்.. “ வெயிலில் நின்றபடி எதையோ தேடி கொண்டிருந்த ஒரு வயதான நபரிடம் ஒரு சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க “ உங்க அப்பா இங்க தான் இருப்பாருன்னு சொன்னாங்க.. அதான் தேடிகிட்டு இருக்கேன்.. எங்க உங்க அப்பாவையே காணோம்..” என்று சொன்னாராம்.. எங்களுக்கும் இதே போல் நக்கல், நையாண்டியாக, சம்மந்தம் சம்மந்தம் இல்லாத குட்டிக்கதை எல்லாம் பேச தெரியும்..” என்று கூறினார்..
முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் தோல்வியை மறைமுகமாக குறிப்பிட்டே, முதல்வர் விஜய் நக்கலாக விமர்சித்துள்ளார்.. விஜய்யின் இந்த கதையை கேட்ட உடன் இபிஎஸ் சிரிக்கிறார்.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..



