ஜெய்ப்பூரின் பிரதாப் நகரைச் சேர்ந்தவர் 45 வயதான நீரஜ் சர்மா. நீதிமன்றத்தில் வேலை செய்து வந்த இவரது கணவர், இவரது கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கருணை அடிப்படையில் நீரஜ் சர்மாவிற்கு நீதிமன்றத்தில் இளநிலை எழுத்தராக அரசு வேலை வழங்கப்பட்டது. இவருக்கு ஆயுஷி என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர், தனது தாய்க்கு கிடைத்த வேலை மற்றும் குடும்ப சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று கூறி அடிக்கடி தனது தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதி நீரஜ் சர்மா உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது சாலை விபத்தாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், நீரஜ் சர்மாவின் சகோதரர் ராகேஷ், தனது அக்காவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் மீண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் தகவல்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, நீரஜ் சர்மாவின் மரணம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பது தெரியவந்துள்ளது. அரசு வேலை மற்றும் சொத்துக்காக நீரஜ் சர்மாவின் மகள், தனது மாமா மற்றும் சில உறவினர்களுடன் இணைந்து இந்த கொலையை நிகழ்த்தியுள்ளார். ஆனால், கூலிப்படையை வைத்து நீரஜ் சர்மாவின் மரணத்தை விபத்து போல அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நீரஜ் சர்மாவின் மகளான ஆயுஷி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரசு வேலை மற்றும் சொத்துக்காக பெற்ற தாயையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: “தனிமையா இருக்கீங்களா? என்ன வாடகைக்கு எடுத்துக்கோங்க”; வைரலாகும் இளம்பெண்ணின் வினோத விளம்பரம்..



