சௌ சௌ இருக்கா? அப்போ இந்த பொரிச்ச குழம்பை ஒரு தடவை செஞ்சு பாருங்க… சுவை வேற லெவல்!

images 21

மதிய உணவிற்கு எளிமையாகவும், குறைந்த நேரத்திலேயே சுவையான ஒரு குழம்பை செய்ய நினைத்தால், சௌ சௌ வைத்து இந்த பொரிச்ச குழம்பை செய்து பார்க்கலாம். வழக்கமாக சௌ சௌவை சாம்பார் அல்லது பொரியலாக மட்டுமே செய்வவர்கள், இந்த வித்தியாசமான ரெசிபியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். சூடான சாதம் மட்டுமல்லாமல், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடனும் இந்த குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.


இந்த ரெசிபியை செய்வதற்கு தேவையான பொருட்கள்: சிறிய சௌ சௌ – 2, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், கடுகு – ½ டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன், சீரகம் – ¼ டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயம் – ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் அலங்கரிக்க கொத்தமல்லித்தழை.

மசாலா அரைக்க, தனியா – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், பட்டை – 1 சிறிய துண்டு, கிராம்பு – 2, காய்ந்த மிளகாய் – 2, துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன் மற்றும் தக்காளி – 1 தேவைப்படும்.

முதலில் சௌ சௌவின் தோலை நீக்கி, விதையை அகற்றி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாணலியில் தனியா, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், பட்டை மற்றும் கிராம்பை வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு துருவிய தேங்காயை சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அதன் பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக விழுதாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

இப்போது குக்கரில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். அதன்பின் நறுக்கிய சௌ சௌ, மஞ்சள்தூள் மற்றும் உப்பை சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கிளறி வதக்கவும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும். குக்கரை மூடி மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவிடுங்கள்.

பிரஷர் முழுமையாக இறங்கிய பிறகு குக்கரைத் திறந்து, குழம்பை ஒருமுறை கிளறி மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான சௌ சௌ பொரிச்ச குழம்பு தயார். இந்த குழம்பை சாதம், இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால் ருசியாக இருக்கும்.

Also Read: ஏசி போட்டுத் தூங்குறீங்களா? இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீங்க… இல்லனா உடம்புக்கு ஆபத்து!

Saranya

You May Like