பணம் தர மறுத்த மனைவி மற்றும் மகள்கள் மீது நபர் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 65 வயதான செல்வராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு 60 வயதான விஜயலெட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 38 வயதான மேனகா என்ற மகளும், 25 வயதான மவுனிகா என்ற மகளும் உள்ளனர். மேனகா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், செல்வராஜ் தனது மனைவியடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம் போல், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் மகள்களிடம் பணம் வேண்டும் என்று கேட்டு செல்வராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் விஜயலெட்சுமி, பணம் தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் 2 மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில், தாய் மற்றும் 2 மகள்களும் அலறி துடித்துள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் விஜயலெட்சுமி மற்றும் அவரது மகள்கள் தீப்பற்றி எரிவதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அவர்கள் மீது எரிந்த தீயை உடனடியாக அணைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்துள்ளனர். செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: “நீ எனக்கு மட்டும் தான்!” – கள்ளக்காதலால் 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்..



