ஒரு காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தும், ஒழுக்கப்படுத்தியும் வளர்ப்பது இயல்பான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தாலே சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களையே தாக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
மறுபுறம், ஆசிரியர்களின் சிறிய கண்டிப்பைக் கூட மனதில் ஏற்றுக்கொள்ள முடியாமல் சில மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அதேபோல், வீட்டிலும் பெற்றோர் தங்களை கண்டிக்கக் கூடாது என்ற மனநிலை சில குழந்தைகளிடம் உருவாகி வருவது கவலைக்குரியதாக உள்ளது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் தனது பெற்றோர் கண்டித்ததை மனதில் வைத்துக் கொண்ட பள்ளி மாணவி ஒருவர் விபரீத முடிவு எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இவருடைய மூத்த மகள் காவியா பொய்கை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் காவியாவிற்குப் பிறந்தநாள். இந்நிலையில், தனது நண்பர்களுடன் பல இடங்களுக்குச் சென்ற அவர், தனது நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி பிறந்தநாளை கொண்டாடினார்.
இது குறித்து அறிந்த காவியாவின் பெற்றோர், அவர் வெளியே பல இடங்களுக்கு சென்று பிறந்தநாள் கொண்டாடியது குறித்து கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காவியா நேற்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். திருநாவுக்கரசு, அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் 2 பெண் குழந்தைகளும் வெளியே சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்த காவியா மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பல மணி நேரத்திற்கு பிறகு வீடு திரும்பிய பெற்றோர், தங்களின் மகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், காவியாவை மீட்டனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



