மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் மற்றும் உணர்வுகளை கையாள முடியாத நிலை அதிகரித்து வருவது மீண்டும் ஒருமுறை கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு அழுத்தம், தனிமை, நண்பர்களை இழக்கும் வேதனை உள்ளிட்ட காரணங்களால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் நண்பரின் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல், பிளஸ் 2 மாணவி ஒருவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பட்ரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 17 வயதான காவியா என்ற மகளும் உள்ளனர். காவியா, அமானிமல்லாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக காவியா மின் விசிறியில் தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்துப் போன பெற்றோர் கதறி துடித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பாலக்கோடு போலீசார், காவியாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காவியாவின் பள்ளி பாடப்புத்தகத்தில், அவர் உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அதில் ‘என்னுடன் படித்த ஹரீஷ் என்ற மாணவன் நண்பனாக இருந்தார். அவர் கடந்த 3ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால், நான் இந்த உலகில் வாழ விரும்பவில்லை. நானும் உன்னை காண உன்னிடத்திற்கு வருகிறேன்’ என எழுதப்பட்டு இருந்தது. நண்பன் இறந்து விட்டதால் வாழ விரும்பவில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு, பிளஸ்2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



