டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (ஜூலை 29) தீவிர சோதனை நடத்தினர். இந்த சூழலில் டாஸ்மாக் நிறுவன முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீதான எப்.ஐ.ஆர் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே சென்ற திமுக ஆட்சியின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது. அமலாக்கத் துறை தந்த தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
இதில் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜி பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. 2வது குற்றவாளியாக ஐ.ஏ.எஸ் விசாகன் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குனர்.
டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர் ராமதுரை முருகன், ஆர். பன்னீர் செல்வம், செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட உதவியாளர் பாஸ்கர், அவருக்கு நெருக்கமான ரதேஷ் ராஜ், கார்த்திக் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகாரிகளுடன் சேர்ந்து 30 கோடிக்கும் மேல் முறைகேடு செய்ததாக ஊழல் தடுப்பு சட்டம் உள்பட 9 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு உள்ளது.
பார் டெண்டர், கொள்முதல், பாட்டிலுக்கு 10 ரூபாய், போக்குவரத்து டெண்டர், ஊழியர் நியமனம், பார்ட்டி பண்ட் என பல வழிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. 2021 முதல் 2025 வரையிலான கால கட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் நடந்து உள்ளதாகவும் எப்.ஐ.ஆரில் கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதி தொடர்பான வழக்கில் முன்ஜாமின் வாங்கி போலீஸ் விசாரணையில் உள்ளார் செந்தில் பாலாஜி. இப்போது அடுத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு அவருக்கு பேரிடியாக இறங்கி உள்ளது.
Read More : செம குட் நியூஸ்..!! இனி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி..!! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி..!!



