திரைத்துறையில் திறமையை விட சில நேரங்களில் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்ற வார்த்தையே அதிகம் பேசப்படுவதாக பல நடிகைகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். காலம் மாறினாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும், பெண்களுக்கு எதிரான இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்ற ஆதங்கமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சீரியல் நடிகை ரேஷ்மா தனது ஆரம்பகால சினிமா அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய ரேஷ்மா, நடிப்பு வாய்ப்புகளைத் தேடி சென்ற ஆரம்ப நாட்களில் மிகவும் வேதனையான அனுபவங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க கூட ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்ய தயாரா என்று நேரடியாக கேட்பார்கள் என்று கூறினார். இதைக் கேட்கும்போதெல்லாம் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது விவரங்கள் அடங்கிய ரெஸ்யூமேவை கொடுக்கும்போதுகூட, அதில் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்ய சம்மதமா என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும் என்றும், அதற்கு மறுப்பு தெரிவித்த பிறகும், மேலாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு மீண்டும் அதே கேள்வியை கேட்பார்கள் என்றும் அவர் பகிர்ந்துள்ளார். அப்போது, தன்னால் அது முடியாது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதாக கூறினாலும், மேலிடத்தில் இருந்து கேட்கச் சொன்னதாக கூறி மீண்டும் வற்புறுத்துவார்கள் என்றும், மறுத்துவிட்டால் அதன்பிறகு வாய்ப்பு கிடைக்காது என்றும் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற அனுபவங்கள் குறித்து பலரும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், ரேஷ்மாவின் இந்த பேட்டியும் மீண்டும் ‘காஸ்டிங் கவுச்’ விவகாரம் குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



