தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிடக் கோரும் விவகாரத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்திற்கு நாள்தோறும் உரியப் பங்கீட்டு நீரைத் திறந்துவிட வேண்டும் எனக்கூறி, காவிரி ஒழுங்காற்றுக் குழு ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது. இருப்பினும், கர்நாடக அரசு வழக்கம் போல் நீர் திறக்க மறுப்பு தெரிவித்து வந்ததோடு, மேகதாது அணை விவகாரத்தையும் மீண்டும் கையில் எடுத்துப் பிரச்சனையை தீவிரப்படுத்தியது.
கர்நாடகாவின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்குத் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வந்தன. மேலும், குறுவை மற்றும் சம்பா சாகுபடிப் பணிகளுக்கு உரிய நீர் கிடைக்காததால், தமிழக டெல்டா மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவும் அபாயச் சூழலும் உருவாக தொடங்கியது.
இத்தகைய இக்கட்டான சூழலில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசுப் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என இறுதியாக உத்தரவிட்டுள்ளது.
இதேவேளையில், கர்நாடக துணை முதலமைச்சரும் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் தற்போது டெல்லியில் முகமிட்டுள்ளார். மேலாண்மை ஆணையத்தின் இந்த கெடுபிடி உத்தரவைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடகப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக டி.கே. சிவகுமாரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More : BREAKING | வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் ஜெயில்..!! கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறியது மசோதா..!!



