மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தமிழக மக்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்க பாஜக மேற்கொள்ளும் சதித் திட்டம் என்றும், அதனை ஆதரிப்பவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்கள் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றிய பின்னர், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “வரலாற்றுப் புகழ்பெற்ற தமிழக மண்ணில் துரோகம் என்ற சொல்லுக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்படும் பெயர் தான் ‘எட்டப்பன்’. தற்போதைய சூழலில் தொகுதி மறுவரையறைத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் அனைவரும் இந்த 21-ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்களாகவே கருதப்படுவார்கள். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் அது தமிழகத்தின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் உரிமைகளையும் கடுமையாகப் பாதிக்கும்” என்று எச்சரித்தார்.
மேலும், மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழர்கள் யாரும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்த அவர், “ஒவ்வொரு மாநிலக் கட்சியும், தேசியக் கட்சியும் ஒருங்கிணைந்து நின்று இந்தத் தொகுதி மறுவரையறை முயற்சியை முறியடித்துத் தோற்கடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
அதேவேளையில், “சமீபத்திய தேர்தல் முடிவுகள் வெளிவந்த கையோடு, கூட்டணிக் கட்சியான திமுகவை விடுத்து தவெகவுக்கு ஆதரவளிக்க முனைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரே, மற்றவர்களை எட்டப்பன் என விமர்சிப்பது வேடிக்கையான முரண்” என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Read More : 15 வயது சிறுமியை ஊர் ஊராக கூட்டிச் சென்று மாறி மாறி பலாத்காரம்..!! 4 பேர் மீது பாய்ந்தது போக்சோ..!!


