ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பதவி விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. நகர பொருளாளர் பதவியைப் பெற்றுத்தர பணம் பேசப்பட்டதாக எழுந்த புகாரும், அது தொடர்பான ஆடியோ பதிவும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தவெக உறுப்பினர் பெத்தராஜ், கட்சியில் புதிதாக இணைந்த நிலையில், தனது உறவினர் ஒருவருக்கு நகர பொருளாளர் பதவி பெற்றுத்தர முயன்றுள்ளார். இதற்காக சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டனை அவர் சந்தித்துள்ளார்.
ஆனால், கட்சியில் அண்மையில் இணைந்தவருக்கு உடனடியாக முக்கிய பொறுப்பு வழங்குவது சரியாக இருக்காது என இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால் பெத்தராஜ் அதிருப்தியடைந்துள்ளார்.
பின்னர், கடலாடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரனை அவர் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நகர பொருளாளர் பதவியைப் பெற்றுத்தர முடியும் என்றும், இதற்காக ரூ.15 லட்சம் வரை செலவாகும் என்றும் ஸ்ரீதரன் கூறியுள்ளார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் அந்தத் தொகை ரூ.5 லட்சமாக குறைக்கப்பட்டதாக தகவல்.
இந்த உரையாடலின்போது, பதவி வழங்க மறுத்த ஒன்றிய நிர்வாகிகள் குறித்து பெத்தராஜ் ஆவேசமாகவும், தகாத வார்த்தைகளிலும் பேசியுள்ளார். அந்தப் பேச்சை ஸ்ரீதரன் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
பின்னர் அந்த ஆடியோவை சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் மற்றும் நகர செயலாளர் அந்தோணி மாதவடியான் ஆகியோரிடம் ஸ்ரீதரன் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் கட்சி நிர்வாகிகளிடையே மோதலாக மாறியுள்ளது.
பதவி தொடர்பான பேச்சுவார்த்தை, பணம் குறித்த விவகாரம் மற்றும் ஆடியோ பதிவு என அடுத்தடுத்து சர்ச்சைகள் உருவான நிலையில், சாயல்குடி தவெக நிர்வாகிகள் மத்தியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: கையில் பணம் இல்லை.. ஆனால் கனவு இருந்தது! பெற்றோருக்காக ஸ்மிருதி மந்தனா செய்த நெகிழ்ச்சி செயல்..



