கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, பவானி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள கேரள மாநிலப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று முதல் கணிசமாக உயர தொடங்கியது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்த நிலையில், ஏற்கனவே 95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் அதன் முழு கொள்ளளவான 97 அடியை எட்டியது.
அணை நிரம்பியதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதையும் அப்படியே வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, நீர் மின்சார உற்பத்தி மூலம் 6,000 கன அடி தண்ணீரும், அணையின் 4 மதகுகள் வழியாக 2,000 கன அடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More : அப்பளம் போல் நொறுங்கிய கார்..!! 5 பேர் துடிதுடித்து மரணம்..!! பொள்ளாச்சியில் சோகம்..!!



