பொள்ளாச்சி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை குறுபம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (45), அவரது மனைவி பூரணி என்ற உமாமகேஸ்வரி (39), மகள்கள் நர்மதா (20), ஆர்த்தி (19) மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமன் (35) ஆகியோர் காரில் உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தனர். பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டுள்ள மரங்களுக்கு, லாரி மூலம் தண்ணீர் ஊற்றும் பணி அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த கார், தண்ணீர் லாரியின் பின்புறம் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய கனகராஜ், உமாமகேஸ்வரி, நர்மதா, ஆர்த்தி மற்றும் ராமன் ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோமங்கலம் காவல் நிலையப் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் விபத்தில் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : கருவாடு பிரியர்களுக்கு எச்சரிக்கை..!! அடிக்கடி சாப்பிட்டா இவ்வளவு ஆபத்தா..? மருத்துவர் ஷாக்கிங் தகவல்..!!



