உடலில் இரும்புச்சத்து (Iron) குறைவாக இருந்தால் சோர்வு, தலைச்சுற்றல், பலவீனம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இரும்புச்சத்து, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும், ரத்த சிவப்பணுக்கள் உருவாகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. பலர் கீரை மற்றும் பேரீச்சம்பழம் மட்டுமே இரும்புச்சத்துக்கான முக்கிய உணவுகள் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவற்றைத் தவிர இன்னும் பல உணவுகளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
பயறு வகைகள்
துவரம் பருப்பு, பாசிப்பயறு, காராமணி, கொள்ளு, மொச்சை உள்ளிட்ட பயறு வகைகள் இரும்புச்சத்துடன் புரதத்தையும் அதிக அளவில் கொண்டுள்ளன. இவை ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க உதவுவதோடு, உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகின்றன. தொடர்ந்து பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது தசை வளர்ச்சிக்கும் நல்லது.
சியா விதைகள்
சியா விதைகள் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த ஒரு சிறந்த உணவாகும். இவற்றை தினசரி உணவில் அளவோடு சேர்த்துக்கொண்டால், ரத்தசோகை அபாயத்தைக் குறைக்க உதவுவதுடன், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சினையையும் கட்டுப்படுத்த உதவலாம்.
முந்திரி
முந்திரியில் நல்ல கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. தினமும் அளவோடு முந்திரி சாப்பிடுவது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்க உதவுகிறது. குறிப்பாக இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவாகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. உடல் வலிமை, தசை வளர்ச்சி மற்றும் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும் இது உதவுகிறது.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் இரும்புச்சத்து, புரதம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த விதைகளை லேசாக வறுத்து சிற்றுண்டியாக சாப்பிடலாம். மேலும், பொடியாக அரைத்து சூப் அல்லது ஸ்மூத்திகளில் கலந்து உட்கொள்வதன் மூலமும் சத்துக்களைப் பெறலாம்.
உணவியல் நிபுணர்களின் கருத்துப்படி, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் வைட்டமின் C அதிகம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றவற்றையும் சேர்த்து சாப்பிட்டால், இரும்புச்சத்து உடலில் நன்றாக உறிஞ்சப்படும். அதேசமயம், தொடர்ந்து சோர்வு அல்லது ரத்தசோகை அறிகுறிகள் இருந்தால், சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
Also Read: வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம்… காலை உணவுக்கு செம்ம ஆரோக்கியமான மில்லெட் ரெசிபி



