டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபான வகைகளை, மது பிரியர்கள் மொபைல் போன் செயலியில் தேர்வு செய்து, பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தி, வாங்கி கொள்ளும் திட்டத்தை, டாஸ்மாக் நிர்வாகம் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் 4,048 டாஸ்மாக் கடைகள் மூலம் பீர் மற்றும் மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளுக்கு, மது பிரியர்கள் நேரில் சென்று, மதுபானங்களை வாங்க வேண்டும். பல கடைகளில், மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மது வகைகளை, பணியாளர்கள் தருவதில்லை. மேலும், மது பாட்டிலுக்கு, அரசு நிர்ணயம் செய்திருப்பதை விட, கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர்.
எனவே, மொபைல் போன் செயலி வாயிலாக, மது பிரியர்கள் தாங்கள் விரும்பும் மது வகைகளை தேர்வு செய்து, அதற்கு உரிய பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தி, கடையில் மது பாட்டிலை பெற்றுக் கொள்ளும் வசதியை, இந்த வார இறுதியில் செயல்படுத்த, டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகளை, மது பிரியர்களே தேர்வு செய்வதற்கு, டாஸ்மாக் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும். ஒருவர் செயலியை பயன்படுத்தும் இடத்தில் இருந்து, 10 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள மது கடைகள் எங்கெங்கு உள்ளன என்பது தொடர்பான தகவல் அந்த செயலியில் தெரியும். எந்த கடையை தேர்வு செய்கிறாரோ, அந்த கடையில் உள்ள அனைத்து மது வகைகளின் இருப்பு விவரமும் செயலியில் தெரியும்.
அதில் மது வகையை தேர்வு செய்து, பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தியதும், கியூ ஆர் கோடு வரும். கடைக்கு சென்று, மொபைல் போனில் உள்ள, கியூ ஆர் கோடை காட்டியதும், அதை கடை பணியாளர்கள், தங்களிடம் உள்ள விற்பனை முனைய கருவியில், ஸ்கேன் செய்து, மது பாட்டிலை வழங்குவார். இதனால், விரும்பிய மது வகைகளை வாங்க முடிவதுடன், கூடுதலாக பணம் தர தேவையில்லை என்றார்.
Read More : சிறையில் இருந்து விடுதலை ஆனார் திமுக MLA மார்க்கண்டேயன்..!! வெளியே வந்ததும் பரபரப்பு பேட்டி..!!



