காவிரி நீர் உரிமை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்ததை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியாமலும், மேகதாது அணை திட்டத்தை தடுக்க இயலாமலும் தவெக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தின் கொந்தளிப்பை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அப்போது உரையாற்றிய, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தவெக அரசின் நிர்வாக திறனின்மையை கடுமையாக விமர்சித்திருந்தார். ஆட்சியாளர்களின் இந்த தோல்விகளை மறைக்கவும், கவனத்தை திசைதிருப்பவும் நோக்கத்துடனேயே உதயநிதியை காவல்துறை கைது செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள சூழலில், எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பலத்த எதிர்ப்பிற்கு பிறகே, விசாரணைக்கு பின் விடுவித்து விடுவோம் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் கூறியதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றம் உதயநிதியை உடனடியாக விடுதலை செய்ய பிறப்பித்த உத்தரவு தவெகவின் போக்கிற்கு விழுந்த சம்மட்டி அடி என்றும் விமர்சித்துள்ளார்.
நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்வரால் காவிரி நீரை கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையை தடுக்க பேசவும் முடியவில்லை. ஆனால், அமைச்சர்களோ முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
உதயநிதி தவறுதலாக பேசுகிறவர் அல்ல. அப்படியே பேசினாலும், உடாடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர். ஆனால், சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது.
ஆட்சி பொறுப்பேற்றது முதல் தங்களை விமர்சிப்பவர்களை கைது செய்வதையே தவெக அரசு முதன்மை பணியாக கொண்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், நீட் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் மீதும் அடக்குமுறைகள் ஏவப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செயல்படும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள திமுகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!
— DMK (@arivalayam) August 4, 2026
- கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.
காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக்… pic.twitter.com/vAxxv41Jfw
Read More : உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட போலீஸ்… பக்கத்து வீட்டில் இருந்து வீடியோ எடுத்த விஜய்யின் நண்பர்!



